நத்தைப் பரம்பரை
மழை வெள்ளத்தில்
சூரியன் நனைந்துகொண்டிருந்த ஒரு பொழுதில்
உன்னிடம் என் காதலைச்சொன்னேன்
அப்போது
உன் குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தாய்
ஒரு கண்ணால் வார்த்தையாடி
ஒரு கண்ணால் மௌனமாகி
என்னைப் பார்த்தாய்
உன் மார்புகளைப் போல
இரண்டும்
ஈரங்கட்டிக்கிடந்தது.
ஹெமிங்வே போல ஆரம்பவார்த்தைக்காய்
பெருமளவு
பிரயத்தனப்பட்டாய்
உனக்கான தாகத்துக்காக
நான் பாத்திரங்களை
தெரிவுசெய்யத்தொடங்கியபோது
புன்னகைத்தாய்
2
நீயும் நானும்
போட்டிபோட்டுக்கொண்டு
வெயிலைக்காயவைத்து
மழையை நனைத்தோம்
அம்மாவின் மடியில் சிக்கிக்கொண்ட
குழந்தைபோல
இறங்கவும் மனமின்றி
இருக்கவும் பிடிப்பின்றி
இறுகிக்கொண்டோம்
மொட்டைமாடியில்
நிலவைப்போர்திக்கொண்டு
புணர்ந்துகொண்டோம்
நட்சத்திரங்களுக்கு வெட்கமேயில்லை
வெறித்து வெறித்து
பார்த்துக்கொண்டிருந்தது
சிரைப்பவனின் கவனத்தோடு
எனது நகர்தல்
தொடங்கியது
முயங்குதலில்
நீ ராவணன் என்றாய்
ராமனும் நல்ல கலவிக்காரனே என்றேன்
சீதையைத்தான் கேட்கவேண்டும்
என்ற உன் தோரணையில்
என் கலவியின் இலட்சணம் புரிந்தது
முத்தமிடத்தெரியாத
நெப்போலியனின் வாள்;போல
மண்ணில் கிடந்தது எனது கர்வம்
ஆண்மைக்கும் வாளுக்கும்
தொடர்பில்லையென்ற வரலாற்றை
ஒரு
கரப்பான் பூச்சி சொல்லிச் சென்றது
சார்லஸ் டிக்கன்சின் வேலைக்காரிபோல
நீ புரிந்துகொள்வதற்காக
வார்த்தைகளை உருவாக்கவேண்டியிருந்தது
ஒருநாள் வலப்பக்கமும்
ஒருநாள் இடப்பக்கமுமாய்
கிடந்து
எங்கள் புணர்தலை
குறிப்பெடுத்துக்கொண்டிருந்தது
உன் குழந்தை
3
மழையில் சூரியன்
நனைந்துகொண்டிருந்த
புரியாப்பொழுதொன்றில்
அவித்த முட்டை உடைக்கும்
லாவகத்தோடு
என்னை நிராகரித்தாய்
ஆங்கிலேயன் மது அருந்துவதைப்போல
ஓவ்வொரு வார்த்தைக்கும்
சரியான
கிண்ணங்களை நீ தெரிவு செய்யத்தொடங்கினாய்
பீஸ்மனும் சிகண்டியும்
பேசிய வார்த்தைகளின் மீதியை
நாம் பேசத்தொடங்கினோம்
கச்சான் கோதில் ஒட்டியிருக்கும்
மண்போல
நீ பற்றிக்கொண்டிருக்கிறாய் என்றேன்
கூடுகளோடு அலைவதில் எனக்கு
பிடிப்பில்லை
நத்தைகளோடு எனக்கு உறவுமில்லையென்றாய்
மழை நனைத்த முத்தங்கள்
நாலைந்து கிடக்கிறது
வைத்துக்கொள் என்றேன்
ஈரமில்லாத முத்தங்களோடு
ஒருவன் காத்திருப்பதாய்
சொல்லிவிட்டு போகும்போது
மொட்டை மாடியில்
புணரும்போது மட்டும்
உன்னை நினைப்பேனென்றாய்.
5
இப்போதெல்லாம்
காலை எழுந்தவுடன்
உன்னுடைய முத்தங்களை
உரித்து உரித்து எறிவதே என் முதல் வேலை
சீழ் படித்த புண்ணை
சுத்தப்படுத்துவதைப்போல
மிகக் கவனமாக என்னிலிருந்து
கறையில்லா துணியினால்
உன்னைத்
துடைத்துக்கொள்ளப் பழகிவிட்டேன்
6
எதுவென்று கணிக்க முடியாத
சாமப்பொழுதொன்றில்
என்னிடம் வந்தாய்
முத்தங்களோடு
காத்திருந்தவன்
சிறுகதைக்குரியவனா என்றேன்
சேர்த்துவைக்கத் தெரிந்தவனுக்குத்
செலவழிக்;கத்தெரியவில்லை
பெட்டிக்குள்ளே பிணம்போல என்றாய்
மரத்துக்கு மரியாதை
செய்யவேண்டுமென்பதற்காய்
நிழல்களை மிதிக்கத்
தடையா என முனகினேன்
சரி எம் புணர்தலைக் குறிப்பெடுத்தவனின்
கதை என்னானது?
உன்னைப்போலவே
சிரைப்பவனின் கவனத்தோடு
கத்தியை
கையாளக் கற்றுக்கொண்டிருக்கிறான்
என்றாய்
எப்போது நீ
நத்தைகளுக்கு உறவானாய் என்றபோது
வார்த்தைகளும் கண்களும்
பார்த்துக்கொண்டிருக்க
என் இதழ்களைத் தின்றுகொண்டிருந்தாய் நீ
நட்சத்திரங்கள் இன்னும் திருந்தவேயில்லை
வெறித்து வெறித்து பார்த்துக்கொண்டே
இருக்கின்றன
எல்லா நேரமும்
போர்த்திக்கொள்ள
நிலவிருக்குமா என்ன?
சி.ப.வேந்தன்